Disclaimer: கீழ்வரும் அனைத்தும் என் சொந்த கருத்துக்கள் மற்றும் கற்பனைகள்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் பெரும்பாலான பகுதிகள் பூமியில் காடுகளாக இருந்தன. அந்த காடுகளுக்கு இடையே மக்கள் நிலப்பரப்பினை சமனாக்கி கிராமங்களும், நகரங்களும் நிறுவினார்கள். அவர்களை காப்பதற்காக அவர்களுக்குள் ஒரு திறமையான, மிகுந்த பலம் உள்ளவனை தேர்ந்தெடுத்து அவனை "அரண்" என்று அழைத்தார்கள். இது நாளடைவில் மருகி "அரசன்" என்றானது. தமிழில் "அரண்" என்றால் பலசாலி, மலை, காடு என்று பொருள் படும். "மனை" என்றால் வீடு, "அரண்மனை" என்றால் அரண் வாழும் வீடு.
சரி, அரண்மனை என்றால் தமிழில் நாம் எப்படி அர்த்தம் கொண்டுள்ளோம்? மிக பெரிய வீடு, "பங்களா" என்று தானே. மக்கள் கூட்டத்தில் ஒருவனை அரசனாக தேர்ந்தேடுக்கும் பொழுது எப்படி அவனுக்கு பெரிய வீடு இருக்கும்? அவன் சிறிய வீட்டில் கூட வசிக்கலாம் இல்லையா?
அரசனின் பணி, தினமும் மக்களை சந்தித்து அவரவர் குறைகளை, தேவைகளை, எண்ணங்களை மற்றும் கருத்துக்களை கேட்டு, அதன்படி ஆலோசித்து யோசனைகளை செயல்படுத்துவது. மக்கள் அனைவரும் அரசனை சந்திக்க பொதுவான ஒரு பெரிய மண்டபம் தேவைப்பட்டது. மண்டபத்தை கட்டினார்கள். மண்டபத்தில் தான் அரசன் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
பெரும்பாலான பகுதிகள் காடுகளாக இருந்ததால், வழிப்போக்கர்கள், வாணிபம் செய்பவர்கள், ஊர் விட்டு ஊர் செல்பவர்கள், காடுகள் வழியாகத் தான் பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணம் மேற்கொள்கையில், இரவில் தங்குவதற்கு மண்டபம் எங்குள்ளது என்று தெரிய வேண்டும். அதற்காகத் தான் உயர்ந்து நிற்கும் கோபுரம் கட்டினார்கள். காட்டு வழியில் செல்லும் போது, மக்களுக்கு மண்டபம் எங்குள்ளது என்று தெரியப்படுத்தும்.
"கோ" என்றால் அரசன், "புரம்" என்றால் கிராமம், பெரிய வீடு என்று பொருள். கோபுரம் மற்றும் மண்டபத்தை சேர்த்து "கோயில்" என்றும் அழைத்தார்கள். "கோ" என்றால் அரசன், "இல்" என்றால் வீடு. கொடிமரம், அரசன் அமர்ந்துள்ள திசையை குறிக்கும். மக்களை மற்றும் இளைபாறுபவர்களை களிக்க கோயில்களில் நடனம், நாடகம், கூத்து மற்றும் இசை பயன் படுத்தப்பட்டது. இரவிலும் கோபுரம் தென்படுவதற்கு, கோபுர வாசலில் விளக்குகள் ஏற்றினார்கள்.
அரசனை நாடி வருபவர்களுக்கும், பயணத்தின் போது தங்குபவர்களுக்கும் உணவு மற்றும் உறைவிடம் வழங்கப்பட்ட இடம் கோயில்கள். காலப்போக்கில் அரசர்கள் அவர்களுக்கு ஒரு இடத்தை தனியாக உருவாக்கிக்கொண்டு, கோயில்களை தெய்வங்களுக்கு கொடுத்துவிட்டார்கள்.
